சனி, 2 ஜூன், 2018

காமராஜரை காதலித்த கருணாநிதி

காமராஜருக்கும் கருணாநிதிக்கும் இருந்த உறவு மிகவும் விசித்திரமான ஓன்று.  காமராஜர் கருணாநிதியை விட 20 ஆண்டுகள் மூத்தவர்.
இருவரும் அரசியல் களத்தில் இரு துருவங்களை சேர்ந்தவர்கள் ,  ஆனாலும் அவர்களிடையே வெறுப்பும் அன்பும் கலவி இருந்ததாகவே, அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

காமராஜர் தனது சிறு வயதிலேயே தேசிய இயக்கமான காங்கிரசில் சேர்ந்து உழைத்து வந்தார். மு கருணாநிதியும் தனது இளம் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்து தேசியத்தை எதிர்த்து வந்தார். இருவரும் எந்த பின் பலமும் இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் இருவரும் எதிர்மறை கொளகைகளை சுமந்து தங்கள் இளமையை கழித்தனர்.
காமராஜர் சுதந்திர போரில் பங்கேற்று உழைத்தார். கருணாநிதி சுதந்திரத்தை எதிர்த்து , விடுதலை வீரர்களை எதிர்த்து  பேசியும் ,எழுதியும் வந்தார் ..

காமராஜர் காந்தியை புகழ்ந்து பேசி விடுதலை போரில் பங்கேற்றார். கருணாநிதி காந்திஜியை கொச்சை படுத்தி எழுதி திராவிட இயக்க கொள்கையை கடைபிடித்தார். காமராஜர் தமிழக  விடுதலை போராட்டத்தை  8 ஆண்டுகள்  தலைமை ஏற்று நடத்திய போது, அதற்க்கு எதிராக செயல் பட்டவர் மு க .

காமராஜர்  1947 ஆம்  ஆண்டு ஆகஸ்டு 15 ஐ தமிழர்களின் விடுதலை நாளாக தலைமை ஏற்று சென்னையில் யானைகள் குதிரைகளுடன் ஊர்வலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது, மு க அவர்கள் தஞ்சாவூரில் விடுதலை தினத்தை  எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

காமராஜர் காங்கிரசின் தலைவராக பணியாற்றிய காலத்தில் அதை சற்று தள்ளி இருந்து பார்த்து வந்தார்.காமராஜர் 1954 இல் முதல்வரான போது, தி மு க சட்ட சபையில் இல்லை. அவர்கள் 1957 இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் மு க வும் ஒருவர். காமராஜரை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு அவருக்கு அப்போது  கிடைத்தது . ஆனால் ஒரு எதிர்  கட்சி காரராக அவர் பார்வை அமைந்தது.

ஐந்து ஆண்டு கால சட்டமன்ற விவாதங்களில் காமராஜர் மேல் வருத்த பட்ட சம்பவங்கள் சில  நிகழ்ந்தன. அதுதான் மு க வின் முதல்சட்ட மன்ற அனுபவம்.ஆனால் காமராஜர் 20 வருசத்துக்கு முன்பே சட்டசபைக்கு வந்தவர். காமராஜரின் சிலை அந்த காலத்தில் தான் தி மு க மாநகராட்சி மூலம் சென்னையில் திறக்க பட்டது.

1962 தேர்தலில் சக்தி மிகுந்த முதல்வராக விளங்கிய காமராஜர், தி மு க வின் 15 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தோற்கடிப்போம் என்று  சொல்லி தேர்தலை சந்தித்தார். ஆனால் மு க தமது தொகுதியான  குழித்தலையை விட்டுவிட்டு தஞ்சாவூருக்கு மாறி விட்டார் . அந்த தேர்தலில் அனைத்து பழைய தி மு க உறுப்பினர்களும் தோற்று விட்டனர் , ஆனால் கருணாநிதி மட்டும்  வென்று விட்டார்.

பின்பு மு க வின் தாயார் இறந்தபோது முதல்வர் காமராஜர் அவர் வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்தியதை மு க நிறைய தடவை சொல்லி இருக்கிறார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மு க முழுமையாக ஈடு பட்ட போது காமராஜரை கடுமையாக தாக்கி பேசிய சம்பவங்கள் நிகழ்ந்தன.
1967 தேர்தலில் காமராஜர் தோற்கடிக்க பட்டபோதும் காமராஜர் மேல் இருந்த கோபம்  குறைந்ததாக தெரியவில்லை. ஏனென்றால் 1969 இல் நடந்த நாகர் கோயில் இடைத்தேர்தலில் காமராஜை எதிர்த்து தீவிர பிரசாத்தை மு க மேற்கொண்டார். அப்போது கடுமையான வார்த்தைகளை அவர் பேசியது உண்மை.

காமராஜரை கால் ஊன்ற விட கூடாது என்பதில் தீவிரமாக இருந்த அவர் 1971 தேர்தலில் இந்திரா காந்தி யுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். காமராஜர் கட்சி பெருந்தோல்வி அடைந்தது.
அதன்பிறகு எம் ஜி ஆர் புது கட்சி ஆரம்பித்தவுடன் , காமராஜர் அவருடன் சேர்ந்து தன்னை எதிர்பார் என்று நினைத்தாரோ என்னோவோ. ஆனால் காமராஜர் எம் ஜி ஆர் யும் எதிர்க்க ஆரம்பித்ததால் காமராஜர் மேல் மதிப்பு வர ஆரம்பித்ததாகவே உணர முடிகிறது.

மு க மதுவிலக்கை தளர்த்திய போது அதை எதிர்த்து பெரிய போராட்டம் நடத்தினார். அப்போது 50 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் ஜெயிலில் அடைக்க பட்டனர். அவர்களை விடுவிக்க அரசு மறுத்தது. புழல் ஜெயிலில் அடைக்க பட்ட குமரி ஆனந்தனை பெயிலில் வர சொன்ன போது அவர் மறுத்துவிட்டார். உடனே காமராஜர் ,  தொண்டர்களை விடுதலை செய்யாவிட்டால் தானே நேரடியாக போராட போவதாக அறிவித்தார். இதை அறிந்தவுடன் அனைவரையும் விடுவிக்க மு க உத்தரவிட்டார்.
மு க ஸ்டாலின் திருமணத்தை காமராஜர் தலைமையில் தான் நடத்தினார்.

இந்திரா காந்தி யுடன் மு க வுக்கு  கருத்து வேறுபாடு வந்தவுடன் , காமராஜரிடம் மு க செய்யும் தவறுகளை அவர் கட்சியினர் சொன்னபோது , அவை சிறிய விஷயமாக கருதி ,  இந்திரா காந்தி செய்யும் தவறுகளில் அவர் அதிகமாக கவனம் செலுத்தினார்.

காமராஜர் இறந்தபோது , சென்னையில் அவருடைய இறுதி சடங்குகளை ஒரு மகனை விட சிறப்பாக செய்ய இரவு பகலாக உழைத்தார் மு க. அன்றய  அவருடைய செயல்பாடுகள் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நினைத்து பார்க்கிறார்கள்.

 காமராஜர் மறைவுக்கு பிறகு பணம் பற்றாக்குறையால் அவர் காரை காங்கிரஸ் கட்சி ஒரு காபி கம்பெனி முதலாளிக்கு விற்று விட்டனர் . இதை கேட்ட உடனே மு க, காமராஜர் போன காரில் காபி கம்பெனி முதலாளி போவதா என்று கேள்வி எழுப்பினார். உடனடியாக காரை திரும்ப காங்கிரஸ் கட்சி வாங்கி விட்டனர்.

காமராஜர் பிறந்த நாள் அன்று "விருதையில் பிறந்து வீரனாக வளர்ந்தாய்" என்று ஆரம்பிக்கும் கவிதையை படைத்தார்.

பின்னாளில் காமராஜர் சம்பந்தமான பல  விழாக்களில் பங்கெடுத்து, அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ் நாடு எங்கும் கொண்டாட சட்டம் இயற்றி காமராஜரின் உழைப்புக்கு நன்றி செலுத்தி பெருமை சேர்த்தார் வீரர் முக.
    

3 கருத்துகள்: