புதன், 12 பிப்ரவரி, 2020

சிரியன் கிறித்துவ பெண் சூசன் இல்லியாசை சந்தித்தேன்


                                                                          
                                              முனைவர் சூசன் இல்லியாசிஸ்

 சிரியன் கிறித்தவர் சூசன் இல்லியாசிஸ் , திருப்பதி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரிக்கு வந்த போது , அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
சிரியன் கிறித்தவர்கள் பற்றி அவர் சொன்ன விஷயங்கள் , அரிய  செய்தியாக இருந்தது. சிரியன் கிருத்தவர்கள் மற்றவர்களை ,மத மாற்றம் செய்வதில்லை என்று சொன்னார். அவர்கள் ஒரு குடும்பத்தை போன்றவர்கள் என்றும் , மற்ற எவரும் மதம் மாறி , சிரியன் கிருத்துவர்களாக ஆக முடியாது என்று சொன்னது வியப்பாக இருந்தது.
    ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித தாமஸ் அவர்கள் கேரளாவிற்கு வந்து , கி பி 52 ஆம் ஆண்டு , நான்கு நம்பூதிரி பிராமணர்களை , கிருத்துவர்களாக மாற்றி , சிரியன் கிருத்தவ சமூகத்தை உருவாக்கியதாக சொன்னார். அந்த நான்கு குடும்பத்தின் 2000 ஆண்டு தொடர் வரலாறு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. மாமன்னன் ராஜ ராஜ சோழன் சந்ததியர் பற்றி தமிழர்கள் கண்டுபிடிக்க திணறும் போது , மலையாள சிரியன் கிருத்துவர்கள் வரலாற்றை பேணி நிற்பது கண்டு பிரமிப்பாக இருந்தது.
   சிரியன் கிறித்தவர்கள், சிரியா நாட்டில் பழக்கத்தில்  இருந்து வரும் முறையில் வழிபாடு செய்வதாகவும் , சிரியன் மொழியை பயன் படுத்துவதாகவும் அவர் சொன்னார். எப்படி பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்கிறார்களோ, அதைப்போல இவர்களும் சிரியன் மொழியில் ஸ்லோகங்களை உபயோக படுத்துவதாக சொன்னார். சிரியன் மொழி ஏசு நாதர் பேசிய அராமைக் மொழியோடு தொடர்புடையதாக சொன்னார்.
இவருடைய குடும்பத்தின் 500 ஆண்டு , சந்ததி வரலாறு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கொச்சி பக்கத்தில் உள்ள அடங்காபுரம் குடும்பம் , அவர்களின் குடும்பமாக சொன்னார்.
   ஆங்கிலேயருடைய காலத்தில் கல்வி கற்க , சென்னை லயோலா கல்லூரிக்கு வந்த அவருடைய மூதாதையர் , இங்கேயே தங்கி, மாநகராட்சியில் அரசாங்க வேலை செய்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு போகும் போது, அவர்களிடம் இருந்து  பாரிஸ் கார்னரில் ஒரு கிருத்தவ ஆலயத்தை , 100 ஆண்டு கட்டு குத்தகைக்கு வாங்கியதாக சொன்னார். 300 ஆண்டு பழைமை வாய்ந்த அந்த ஆலயம் இன்றும் சிறப்பாக செயல்படுவதாக சொன்னார். இன்றைக்கு சிரியன் கிருத்தவர்கள் 16 ஆலயங்களை சென்னையில்  கட்டி , பரந்து விரிந்து இருப்பதாக சொன்ன அவர் , சென்னை  எம் எம் எம் மருத்துவமனை உட்பட  நிறைய பள்ளிகள், மற்றும் மருத்துவ , பொறியியல் கல்வி கூடங்களை சிறப்பாக நடத்துவதாக தெரிவித்தார்.
   தமிழ் மற்றும் மலையாளம் பேச மட்டுமே தெரியும் என்று சொல்லும் சூசன் , வீட்டில் ஆங்கிலத்தை அதிகம் உபயோகிப்பதாக சொல்கிறார்.
தமிழ் நாட்டு சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கும் சிரியன் கிறித்தவரான  இந்த சூசன் இல்லியாஸ் முதுகலை முனைவர் பட்டம் படித்த பொறியியல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தகுந்தது.